
மேற்கிந்திய கிரிக்கெட் வாரியத்தை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், வெளிப்படையாக விமர்சித்ததால் அணியில் இருந்து நீக்கப்பட்டார் கிறிஸ் கெய்ல். அதன் பிறகு அணியில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
பிரச்சனைக்கு தீர்வு காண நடத்தப்பட்ட பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு சமீபத்தில் சுமூக முடிவு எட்டப்பட்டது. இருப்பினும் அடுத்த மாதம் நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணியில் கெய்ல் சேர்க்கப்படவில்லை.
அவர் தற்போது ஐ.பி.எல். போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். எனவே மேற்கிந்திய தீவுகள் அணியில் சேர்க்கப்பட வேண்டும் என்றால் அவர் அணிக்கு விளையாட தயாராக இருப்பதை கிரிக்கெட் வாரியத்துக்கு முன் கூட்டியே தெரியப்படுத்த வேண்டும் என்று அந்த நாட்டு வாரியம் அறிவித்து இருந்தது.
இந்த நிலையில் மீண்டும் தேசிய அணிக்கு திரும்புவதற்கு தயாராகும் வகையில், இங்கிலாந்தின் சோமர்செட் அணிக்காக விளையாட செய்திருந்த ஒப்பந்தத்தை கெய்ல் முறித்துள்ளார். இதுதொடர்பாக சோமர்செட் கிரிக்கெட் கிளப்புக்கு அவர் கடிதம் எழுதி உள்ளார்.
அத்துடன் மேற்கிந்திய கிரிக்கெட் வாரிய தேர்வாளர்களிடமும் கெய்ல் பேசி இருக்கிறார். ஐ.பி.எல். போட்டி முடிந்ததும் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக எந்தவகையான ஆட்டத்திலும் விளையாட தயார் என்று கூறியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டிக்கான அணியில் கெய்ல் சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது. கெய்ல் மீண்டும் அணிக்கு திரும்ப உள்ளதை மேற்கிந்திய தீவுகள் அணி கேப்டன் சமி வரவேற்றுள்ளார்.
No comments:
Post a Comment