கரண்ட் இல்லாத கொடுமை, பாக்கெட்டைக் கிழிக்கும் விலைவாசி, எப்போதுமில்லாத உக்கிர வெயில், ஒன்றுமே செய்யாவிட்டாலும் கோடிக்கணக்கில் விளம்பரம் செய்து தம்பட்டம் அடித்துக் கொள்ளும் அரசியல்வாதிகள்... இந்த இம்சைகளையெல்லாம் மறந்துவிட்டு, மூன்று மணி நேரத்தைச் செலவிட வேண்டும் என்றால்... அது சினிமாதான். அந்த சினிமாவும் அழுது வடியாமல்... கலகலவென கடைசி வரை சிரிப்பும் கும்மாளுமாக இருந்தால் எவ்வளவு நல்லாருக்கும் என மக்கள் விரும்புவதை அப்படியே பிரதிபலிப்பது போல படங்களும் அமைந்துவிட்டால்...
அப்படி அமைந்ததால்தான் ஒரு கல் ஒரு கண்ணாடியும், கலகலப்பும் மெகா வெற்றியைப் பெற்றுள்ளன.
இப்போது கோடம்பாக்கம் எங்கும் காமெடி படங்களுக்கான டிஸ்கஷன்தான் சீரியஸாக ஓடிக் கொண்டிருக்கின்றன.
புதிதாக ஒரு கான்செப்டை உருவாக்கி திரைக்கதை அமைப்பதைவிட, ஏற்கெனவே வெற்றி பெற்ற படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பது தமிழிலும் வெற்றியைக் கொடுக்க ஆரம்பித்துள்ளதால், கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளனர் யுடிவி நிறுவனத்தினர்.
விமல், அஞ்சலி, ஓவியா, சிவா, சந்தானம், இளவரசு என அதே கூட்டணியுடன் கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்குகிறார்கள். சுந்தர் சி இயக்குகிறார். அக்டோபரில் படப்பிடிப்பைத் தொடங்குவதில் உறுதியாக உள்ளது யுடிவி நிறுவனம்.
No comments:
Post a Comment