Saturday, 26 May 2012

நித்தியானந்தா... டிராபிக் ராமசாமி சொல்வதைக் கேளுங்க!

 Traffic Ramasamy Supports Nithayanantha சென்னை: சுவாமி விவேகானந்தரும், நித்தியானந்தாவும் ஒன்று என்று கூறியுள்ளார் டிராபிக் ராமசாமி.

டிராபிக் ராமசாமியைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சென்னையைச் சேர்ந்தவரான டிராபிக், பல நல்ல பொது நலன் மனுக்களை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்து மக்களுக்கு பல பேருதவிகளைச் செய்தவர்.

இவர் மீது எப்போதும் கொந்தளிப்புடனும், கொதிப்புடனும் ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். அந்த அளவுக்கு மற்றவர்களின் வயிற்றெரிச்சலை வாங்கிக் கட்டிக் கொண்டவர், ஆனாலும் மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர்.

அப்படியாப்பட்ட டிராபிக் ராமசாமி தற்போது நித்தியானந்தாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். சமீபத்தில் மதுரை ஆதீன மடத்திற்கு விசிட் அடித்த அவர் அங்கு நித்தியானந்தாவை புகழ்ந்து பேசியுள்ளார். இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அவரிடம் கேட்டால், விவேகானந்தவர் மிகவும் தைரியமானவர். அவருக்குப் பிறகு அந்தத் தைரியத்தை நித்தியானந்தாவிடம்தான் பார்க்கிறேன். 100 இளைஞர்களைக் கொடுங்கள், இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன் என்று கூறியவர் விவேகானந்தர். அதேபோல நித்தியானந்தவிடம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உள்ளனர். அவரது செயல்களில் நம்பிக்கை ஏற்பட்டதால்தான் அவரை விவேகானந்தருடன் ஒப்பிட்டுப் பேசினேன் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், மதுரை ஆதீனத்திற்கு பல கோடி சொத்துக்கள் உள்ளன. அதை சில சுயநலவாதிகள் அனுபவித்து வருகிறார்கள். அவர்களிடமிருந்து சொத்துக்களை நித்தியானந்தா மீட்டு விடுவார் என்று பயந்துதான் அந்த சுயலவாதிகள் தூண்டுதலின் பேரில் நித்தியானந்தாவுக்கு எதிரான போராட்டங்கள் தூண்டி விடப்படுகின்றன என்று கூறுகிறார் டிராபிக்.

சரி நித்தியானந்தா மீது பாலியல் வழக்குகள் உள்ளனவே என்ற கேள்விக்கு, அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மீதும்தான் இருக்கிறது. மேலும் நித்தியானந்தா மீதான பாலியல் புகார்கள் நிரூபிக்கப்படவே இல்லையே என்றார் டிராபிக்.

மேலும், நித்தியானந்தாவுக்கு ஆதரவாக பேசுவதற்காக தான் பணம் வாங்கி விட்டதாக கூறப்படுவதையும் அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

No comments:

Post a Comment